NATIONAL

குழந்தை பராமரிப்பாளர் கைது

கோலாலம்பூர், செப் 6: பண்டார் ஸ்ரீ பெர்மைசூரி, செரஸில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பாளர் ஒருவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அப் பராமரிப்பாளர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

உள்ளூர் பெண்ணான சந்தேக நபர் (28) பாதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்திருப்பது கண்டறியப் பட்டதாகச் செரஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுடின் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை திங்கள் கிழமை அன்று காலை 11.28 மணியளவில் சாலாக் செலாத்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஜாம் ஹலீம் கூறினார்.

“அதே நாளில் அப்பெண் பிற்பகல் 1 மணியளவில் கோலாலம்பூர் கண்டிஜன்ட் காவல்துறை தலைமையகத்தில் சரணடைந்த பிறகு கைது செய்யப்பட்டார்.

“சந்தேக நபர் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக 24 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார்,” என்று ஜாம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் செரஸ் காவல்துறையை 03-9284 5050/ 5051 என்ற எண்ணிலும், கோலாலம்பூர் காவல்துறையை ஹாட்லைன் 03-2115 9999 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இச்சம்பவம் தொடர்பான ஒரு நிமிடம், 10 வினாடிகள் மற்றும் 56 வினாடிகள் கொண்ட இரண்டு வீடியோக்கள் முகநூல் மூலம் வைரலானது.

– பெர்னாமா


Pengarang :