NATIONAL

கொள்கலன் லோரி-கார் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் கருகி மரணம்- ரவாங்கில் சம்பவம்

கோலாலம்பூர், செப் 7- கார் ஒன்று கொள்கலன் லோரியுடன் மோதி
தீப்பிடித்த சம்பவத்தில் அக்காரிலிருந்த இருவர் கருகி மாண்டனர். இந்த
கோர விபத்து ரவாங், ஜாலான் கோல காரிங்கில் இன்று அதிகாலை
நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 3.53 மணியளவில் தகவல் கிடைக்கப்
பெற்றதைத் தொடர்ந்து ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச்
சேர்ந்த தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக
சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப்
பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது தீப்பற்றிய காரினுள் 26 மற்றும் 23
வயதுடைய ஆணும் பெண்ணும் கருகிய நிலையில் கிடப்பதை தீயணைப்பு
வீரர்கள் கண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் ஹோண்டா சிட்டி ரக கார் 70 விழுக்காடும் கொள்கலன்
லோரி 50 விழுக்காடும் தீயினால் பாதிக்கப்பட்டன என்று அவர் அறிக்கை
ஒன்றில் சொன்னார்.

இந்த விபத்தில் லோரி ஓட்டுநர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியதாகவும்
அவர் குறிப்பிட்டார்.


Pengarang :