NATIONAL

கை,கால்கள் கட்டப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் முதியவரின் உடல் கண்டு பிடிப்பு

பாலிங், அக் 2- கை,கால்கள் கட்டப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில்
முதியவரின் ஒருவர் தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இந்த
கொடூரக் கொலைச் சம்பவம் கோல கெட்டில், தாமான் டேசா பிடாராவில்
நேற்று நிகழ்ந்தது.

முதியவர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கிடப்பது குறித்து நேற்று
மாலை 3.21 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாகப் பாலிங் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சம்சுடின் மாமாட் கூறினார்.

அந்த வீட்டின் பிரதான அறையில் உள்ள கட்டிலில் கை,கால்கள்
கட்டப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் அவ்வாடவரின் உடல்
காணப்பட்டது. அந்த வீட்டை உடைத்து உள்ளே நுழைந்ததற்கான எந்த
அறிகுறியும் காணப்படவில்லை.

அந்த வரிசை வீட்டில் இரகசிய கண்காணிப்பு கேமரா இல்லாத நிலையில்
அண்டை வீட்டிலுள்ள கேமராவை ஆய்வு செய்த போது இரு சந்தேகப்
பேர்வழிகள் வீட்டிலிருந்து வெளியேறியது தெரிய வந்தது என்று அவர்
இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

அவ்விரு சந்தேகப்பேர்வழிகளும் நேற்று மாலை 3.00 மணியளவில்
அவ்வீட்டிலிருந்து வெளியேறி கருப்பு நிற யமஹா நிற மோட்டார்
சைக்கிளிலில் ஏறிச் சென்றது அந்த கேமராவில் பதிவாகியுள்ளது என
அவர் தெரிவித்தார்.

அந்த முதியவரிடமிருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் பணப்பை
ஆகியவை காணாமல் போனது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக்
கூறிய அவர், இச்சம்பவத்திற்குக் கொள்ளை முயற்சி காரணமாக
இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகச் சொன்னார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவி இறந்தது முதல் அந்த
முதியவர் அவ்வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :