NATIONAL

முதியவர் செலுத்தியக் கார் கடையை மோதியது- இருவர் காயம்

பட்டர்வெர்த், அக் 16- முதியவர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து
நான்கு இலக்க கடையை மோதி உள்ளே நுழைந்தது. இங்குள்ள தாமான்
மோலேக்கில் நேற்று மாலை 3.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில்
கார் ஓட்டுநரும் அந்த கடையின் பெண் ஊழியரும் காயமடைந்தனர்.

அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் தனது புரோட்டோன்
சாகா காரின் ஆக்கிலேட்டரை தவறுதலாக அழுத்தியதால் அக்கார்
அதிவேகத்தில் அக்கடையினுள் நுழைந்து அதன் முகப்பிடத்தை
மோதியது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 3.06 மணியளவில் தாங்கள்
அவசர அழைப்பைப் பெற்றதாக பட்டர்வெர்த் தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி நோர்ஹிஷாம் முகமது நோர்
கூறினார்.

இந்த மோதல் காரணமாகக் காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட அந்த
முதியவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில்
மேற்கொள்ளப்பட்டதாக் கூறிய அவர், இடுப்பில் காயங்களுக்குள்ளான
அந்த முதியவர் சிகிச்சைக்காகச் செபராங் பிறை மருத்துவமனைக்குக்
கொண்டுச் செல்லப்பட்டார் என்றார்.

இச்சம்பவத்தின் போது கடையின் முகப்பிடத்திலிருந்து சுமார் இரண்டு
மீட்டர் தொலைவில் உண்வு மேசையில் இருந்த 70 வயது பெண் கால்
மற்றும் கைகளில் காயங்களுக்குள்ளானார். மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாதுவின் உடல் நிலை சீராக உள்ளது என
அவர் சொன்னார்.

காரை கடையின் முன் நிறுத்த தாம் முயன்றதாகவும் அப்போது
தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தி விட்டதால் கார் கட்டுப்பாட்டை
இழந்து கடையினுள் நுழைந்ததாகவும் அந்த முதியவர் தெரிவித்ததாக
நோர்ஹிஷாம் கூறினார்.


Pengarang :