SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதியில் தீபாவளி பற்றுச் சீட்டுக்கு ஒரே நாளில் 280 விண்ணப்பங்கள்

ஷா ஆலம், அக் 19- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளியை முன்னிட்டு மாநில அரசு ஷோம் ஷோப்பிங் பற்றுச்
சீட்டுகளை குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்குச் சட்டமன்றத்
தொகுதிகள் மூலம் விநியோகித்து வருகிறது.

இதன் அடிப்படையில் கோத்தா கெமுனிங் தொகுதிக்கு 200 வெள்ளி
மதிப்பிலான 450 பற்றுச் சீட்டுகளை மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த
பற்றுச் சீட்டுகளுக்கான விண்ணப்பம் இன்று திறக்கப்பட்ட நிலையில்
பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் இதனைப் பெறுவதற்கு
தொகுதி சேவை மையத்தில் குவிந்தனர்.

இன்று மட்டும் 280 விண்ணப்பங்களை தொகுதி மக்களிடமிருந்து தாங்கள்
பெற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் கூறினார்.

இம்முறை இத்தொகுதிக்கு 450 பற்றுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள
நிலையில் அவற்றை ஆலம் மெகா, ஹைக்கோம், புக்கிட் கெமுனிங்,
புக்கிட் ரீமாவ், கோத்தா கெமுனிங்,புத்ரா ஹைட்ஸ், தாமான் ஸ்ரீமூடா
ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க
வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி ஷா
ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள்
மூலம் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், தொகுதிக்கு வழங்கப்பட்ட
கோட்டா முடியும் வரை இந்த பற்றுச் சீட்டு விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றார்.


Pengarang :