NATIONAL

விமான நிறுவனம் தொடர்பான விசாரணைக்கு உதவ மேலும் நால்வர் கைது

கோலாலம்பூர், அக் 27- விமான நிறுவனத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் நான்கு பேரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.

முப்பது முதல் 62 வயதுக்குட்பட்ட உள்நாட்டினரான இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டவர்களில்  அடங்குவர் என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சி.சி.ஐ.டி.) இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

அவர்களில் மூவர் நேற்று பிற்பகல்  1.00 மற்றும் 1.30 மணிக்கும் இடையே  ஜாலான் துன் ரசாக்கில்  உள்ள குற்றப்புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு
வாக்குமூலம் அளிக்க வந்த போது தடுத்து  வைக்கப்பட்டதாகவும் நான்காவது நபர் புக்கிட் துங்குவில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நால்வரும் கருவூல உதவியாளர், நிதி உதவியாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மேலாளர் மற்றும் ஒரு நிறுவனத்தின் வழக்கறிஞர் ஆகியோரும் அடங்குவர்.

2001ஆம் ஆண்டு  பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத பொருளீட்டல் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக  விமான நிறுவனம் ஒன்றின்  இணை நிறுவனர், அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் ஷா ஆலமில் உள்ள அவர்களது வீட்டில் கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து மற்றொரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
அவர்கள் அனைவரும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :