கோலாலம்பூர், நவ 7 – இந்த வார இறுதியில் தீபாவளி கொண்டாட்டப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண விலக்களிப்பை வழங்கும் திட்டம் இன்னும் விவாத நிலையில் உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுடன் செலவைப் பகிர்ந்து கொள்வதும் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாகும் என்று துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் கூறினார்.
டோல் கட்டண விலக்கு பற்றி பாகான் எம்பி லிம் குவான் எங் உட்பட அவை உறுப்பினர்கள் பலமுறை முன்மொழிந்ததை நாங்கள் அறிவோம்.
தற்போது, போல் கட்டண விலக்கு இன்னும் விவாதத்தில் உள்ளது. இறைவன் அருளால் நல்ல செய்தி வரும். இது குறித்து அரசாங்கம் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கும் என்று அவர் நேற்று நிதி அமைச்சுக்கான செயல்குழு நிலையிலான 2024 விநியோக மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் கூறினார்.
முன்னதாக, வாய்மொழிக் கேள்வி அங்கத்தின் போது, தீபாவளிக்கு டோல் கட்டண விலக்களிக்கும் சாத்தியம் உள்ளதா என்று ஜெலுத்தோங் உறுப்பினர் ஆர்.எஸ் என். ராயர் துணைப் பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமதுவிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
எவ்வாறாயினும், நிதியமைச்சின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இந்த விவகாரம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்று அப்துல் ரஹ்மான் கூறினார்.