Budget

வெ. 50 லட்சம் செலவில் உயர்கல்விக்கூட கல்விக் கட்டணத் திட்டம் அமல் 

ஷா ஆலம், நவ 10 – உயர்கல்விக் கூடங்களில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் பாயு எனப்படும் அடிப்படைக் கல்விக் கட்டணத் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் பி40 மற்றும் நடுத்தர வருமானம் பெறும் எம்40 தரப்பினரை இலக்காக கொண்ட இந்த திட்டத்திற்கு மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளது.

இந்த பாயு திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை யுனிசெல் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள மாணவர்கள் வெ.500 முதல் வெ.1,000 வெள்ளி வரை அடிப்படைக் கல்விக் கட்டண உதவியைப் பெறுவர் எனக் கூறிய அவர், இதன் மூலம் 2,500 மாணவர்கள் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார்.

மாநில சட்டமன்றத்தில் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைக் கூறினார்.


Pengarang :