கோலாலம்பூர், டிச 27- அடுக்குமாடி வீட்டின் பால்கனியில் இருந்த டி-
சட்டையை எடுக்க முயன்ற பல்கலைக்கழக மாணவர் 34வது
மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம்,
இங்குள்ள கம்போங் பாரு, ஜாலான் ராஜா அப்துல்லாவில் உள்ள ஆடம்பர
குடியிருப்பில் நேற்று நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 8.17 மணியளவில் தாங்கள் புகாரைப்
பெற்றதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்
டெல்ஹான் யாஹ்யா கூறினார்.
அந்த 18 வயது மாணவரின் உடல் 39 மாடிகள் கொண்ட அந்த ஆடம்பர
அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இரத்த வெள்ளத்தில் கண்டு
பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் அந்த மாணவர் வீட்டின் பால்கனியில்
விழுந்த டி- சட்டையை எடுக்க முயன்றதை தாங்கள் கண்டதாகச் சம்பவ
இடத்திலிருந்த இருவர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மேசை ஒன்றின் மீதிருந்து அந்த பால்கனியின் கேட்டில் ஏற அந்த
மாணவர் முயன்றுள்ளார். எனினும், நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து
விட்டார் என நோர் டெல்ஹான் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
பலியான மாணவரின் உடல் பரிசோதனைக்காகக் கோலாலம்பூர்
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர்,
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
என்றார்.