தோக்கியோ, ஜன 4 – ஜப்பான் நாட்டின் இஷிகாவாவில் இவ்வார
தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை
78ஆக உயர்ந்துள்ளது. ரிக்டர் அளவில் 7.6 எனப் பதிவான இந்த
நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நில
அதிர்வுகள் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை
78ஆக உயர்ந்துள்ளதாக ஷின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.
இந்த பூகம்பத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வஜிமா நகரில் 44 பேர்
பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப் பிந்தைய நில அதிர்வு
காரணமாக இஷிகாவா பகுதியில் குழாய்கள் உடைந்து சுமார் 95,000
குடும்பத்தினர் குடிநீர்த் தடையை எதிர்நோக்கினர்.
இந்த பூகம்பத்தில் இடிந்த விழுந்த கட்டிட இடிபாடுகளிலிருந்து
பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மீட்பு பணியாளர்களுக்குப் பெரும் சவாலாக
இருந்து வருகிறது.
மூன்று தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சுனாமியும்
ஏற்பட்டு இஷிகாவாவின் பல இடங்களில் கடல் நீர் சூழந்தது.
சுனாமி காரணமாக இஷிகாவாவில் சுமார் 100 ஹெக்டர் பகுதி
பாதிக்கப்பட்டதாக ஜப்பானின் நில அமைச்சு கூறியது.
நிலநடுக்கப் பேரிடர் நிகழ்ந்த 40 மணி நேரம் ஆகிறது. நாங்கள் இன்னும்
பதற்றமான சூழலில் இருக்கிறோம். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள
பலர் மீட்புப் பணியாளர்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர் என்று
பிரதமர் ஃபூமியோ கிஷிடா நேற்று தெரிவித்தார்.