NATIONAL

மூன்று மாநிலங்களிலுள்ள வெள்ள நிவாரண மையங்களில் 980 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், ஜன 29 – வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகாங், திரங்கானு
மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள பத்து துயர் துடைப்பு
மையங்களில் இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி 980 பேர்
தங்கியுள்ளனர்.

திரங்கானு மாநிலத்தின் டுங்குன் மாவட்டத்தில் 275 குடும்பங்களைச்
சேர்ந்த 923 பேர் எழு நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாகத்
தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா)
கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை கூறியது.

பகாங் மற்றும் ஜோகூரில் வெள்ள நிவாரண மையங்களில்
தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. கோத்தா
திங்கியிலுள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் 29 பேரும் ரொம்பினில்
உள்ள இரு மையங்களில் 28 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இதனிடையே, வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் டெலிமெட்ரி
மையத்தின் ஆய்வின்படி கெடா, கிளந்தான், சிலாங்கூர், பெர்லிஸ்,
திரங்கானு ஜோகூர் ஆகிய மாநிலங்களிலுள்ள பல ஆறுகளில் நீர் மட்டம்
அபாயக் கட்டத்தில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பாலம் உடைந்தது போன்ற காரணங்களால்
நாடு முழுமையும் உள்ள 25 சாலைகள் போக்குவரத்துக்கு
மூடப்பட்டுள்ளதாக நட்மா தெரிவித்தது.


Pengarang :