NATIONAL

வறட்சி காலம் அடுத்த மாதம் தொடங்குகிறது- எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள 400 இடங்கள்

புத்ரா ஜெயா ஜன 29 – அடுத்த மாதம் வறட்சி காலம் தொடங்கும் என
எதிர்பார்க்கப்படும் நிலையில் நாடு முழுவதும் எளிதில் தீப்பிடிக்கும்
சாத்தியமுள்ள 400க்கும் மேற்பட்ட இடங்கள் மீது தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறை தீவிரக் கவனம் செலுத்துகிறது.

சதுப்பு நிலப்பகுதிகள், சட்டவிரோத மற்றும் ஊராட்சி மன்றங்களால்
நிர்வகிக்கப்படும் குப்பை அழிப்பு மையங்களும் அவற்றில் அடங்கும் என்று
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர்
ஹிஷாம் முகமது கூறினார்.

இவற்றில் நாங்கள் மிகவும் கவலைப்படும் இடங்கள் என்றால் சிலாங்கூர்,
ஜோகூர், பகாங், சபா மற்றும் சரவாவில் உள்ள எளிதில் தீப்பிடிக்கும்
சாத்தியம் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளாகும். இத்தகைய பகுதிகள் மீது
நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை
தலைமையகத்தில் நடைபெற்ற வருடாந்திர அணிவகுப்பு நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டில் ஏற்படக் வறட்சி நிலை கடந்த மூன்றாண்டுகளைக்
காட்டிலும் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, தீயிடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொறுப்பற்றத் தரப்பினர்
குறித்த தகவல்களை விரைந்து தீயணைப்புத் துறைக்கு வழங்கும்படி
பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

எங்களின் நடைமுறைகளைப் பயன்படுத்தி நாங்களும் கண்காணிப்பு
பணிகளை மேற்கொள்ள முடியும். எனினும், இது போன்ற நடவடிக்கைளைக்
கண்டறிவதில் மக்களின் கண்கள் ஆக்ககரமான பங்கினை ஆற்றும்.

நாங்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக சம்பவ இடம், தீயின் தாக்கம் குறித்த தகவல்களை அவர்களால் துல்லியமாக வழங்க இயலும் என்றார் அவர்.


Pengarang :