SELANGOR

மாநில துணைச் செயலாளர் ஜாஹ்ரி பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டாராக நியமனம்

ஷா ஆலம், ஜன 30 – சிலாங்கூர் மாநில அரசு துணைச் செயலாளர்
(நிர்வாகம்) முகமது ஜாஹ்ரி சாமிங்கோன் பெட்டாலிங் ஜெயா மாநகர்
மன்றத்தின் புதிய டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தனது அதிகாரப்பூர்வப்
பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதோடு அவருக்குத் தனது
வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. ஜாஹிரின் நியமனம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கி அமலுக்கு வருகிறது.

பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமிரின்
ஈராண்டு கால பதவிக்காலம் கடந்தாண்டு அக்டோபர் 20ஆம் தேதி
முடிவுக்கு வந்தது. அன்று முதல் அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்து
வருகிறது.

பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டாராக ஜாஹ்ரி நியமிக்கப்பட்டதை
உறுதிப்படுத்திய துணை டத்தோ பண்டார் அஸ்னான் ஹசான் அவரின்
பதவியேற்புச் சடங்கு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறினார்.

அரசுத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்ட
ஜாஹ்ரி, பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

மாநில அரசு துணைச் செயலாளராக அவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன்
மாதம் நியமிக்கப்பட்டார். அதே காலக்கட்டத்தில் சிலாங்கூர் அரசு
தலைமைச் செயலகத்தில் தலைமை டிஜிட்டல் அதிகாரி மற்றும் தகவல்
தொடர்பு பாதுகாப்பு அதிகாரி ஆகிய பொறுப்புகளையும் வகித்து வந்தார்.


Pengarang :