NATIONAL

தீ விபத்தில் இரு வீடுகள், வாகனங்கள் சேதம்- நீலாயில் சம்பவம்

சிரம்பான், பிப் 13 – இங்குள்ள கம்போங் பாரு நீலாயில் நேற்று மாலை
ஏற்பட்ட தீவிபத்தில் இரு வீடுகள், ஒரு கனரக இயந்திரம் மற்றும் இரு
கார்கள் கடுமையாகச் சேதமுற்றன.

இந்த விபத்தில் ஒரு வீடு 80 விழுக்காடும் மற்றொரு வீடு 50 விழுக்காடும்
சேதமுற்ற வேளையில் அங்கிருந்த வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு 80
விழுக்காட்டு சேதம் ஏற்பட்டது என்று நீலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தின் நடவடிக்கை கமாண்டர் பக்கார்யா முகமது சாலே கூறினார்.

இந்த தீ விபத்து தொடர்பில் நேற்று மாலை 5.20 மணியளவில் பொது
மக்களிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

தீயை அணைக்கும் பணியில் 14 தீயணைப்பு வீரர்கள் இரவு 7.45 மணி
வரை ஈடுபட்டனர். சுமார் 35 நிமிடங்களுக்குப் பின்னர் தீ முற்றாக
அணைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த சம்பவத்தில் மண்வாரி இயந்திரம் ஒன்று 80 விழுக்காடு சேதமுற்ற
வேளையில் இரு புரோட்டோன் கார்கள் 100 விழுக்காடு அழிந்தன.
அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் உயிருடற்சேதம்
ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு
வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :