SELANGOR

மக்களின் சுமையைக் குறைக்க மலிவு விற்பனை அதிகரிப்பு- செலாயாங் தொகுதி திட்டம்

செலாயாங், பிப் 20 – பொது மக்களின் எதிர்பார்ப்ப்புகளை ஈடு செய்யும்
வகையில் குவாங் சட்டமன்றத் தொகுதியில் மாதம் இரு முறை மலிவு
விற்பனையை நடத்த செலாயாங் நாடாளுமன்றத் தொகுதி சேவை மையம்
திட்டமிட்டுள்ளது.

சந்தையைவிட குறைவான விலையில் பொருள்கள் விற்கப்படும்
காரணத்தால் பொதுமக்கள் மத்தியில் இந்த விற்பனைக்குப் பெரும்
எதிர்பார்ப்பு நிலவுவதாகத் தொகுதி ஒருங்கிணைப்பு அதிகாரி லியா அரிபின்
கூறினார்.

கடந்த மாதம் டதாரான் பெங்குளு முக்கிமில் நடத்தப்பட்ட இந்த மலிவு
விற்பனை நிகழ்வில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குவாங்
மாவட்டத்தின் ஏழு இடங்களில் அடிக்கடி இந்த மலிவு விற்பனையை
நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

கம்போங் செத்தியா லாமான் நலுரியில் இன்று காலை நடைபெற்ற இந்த
மலிவு விற்பனையில் 400 பேர் கலந்து கொண்டு பொருள்களை வாங்கிச்
சென்றனர். இந்த விற்பனையில் கலந்து கொள்ள காலை 7.00 மணி முதல்
பொது மக்கள் காத்திருந்த வேளையில் கோழி மற்றும் முட்டைக்கு
பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று அவர்
சொன்னார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி
கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், ஐந்து கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காகப்
பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து
கொள்ளலாம்.


Pengarang :