ஜார்ஜ் டவுன், பிப் 21: உணவு விநியோகம் செய்யும் ஒருவர் ஜாலான் புக்கிட் கம்பீர் வழியாகச் சென்று கொண்டிருந்த போது அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பாலிக் புலாவைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். அந்நபர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது என வடகிழக்கு மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துட் ஹமீட் கூறினார்.

அவரது தரப்புக்குப் பிற்பகல் 3.30 மணியளவில் பொதுமக்களிடமிருந்து விபத்து பற்றி தகவல் கிடைத்தது மற்றும் ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர் புக்கிட் ஜம்புல் திசையிலிருந்து ஜாலான் புக்கிட் கம்பீர் வழியாக ஜாலான் யீப் சோர் ஈ நோக்கி சென்று கொண்டிருந்தார் என்பது தெரிய வந்தது என்றார்.

“அந்நபர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளாகியதாக நம்பப்படுகிறது.

“மோதலின் தாக்கத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மரணத்திற்கான சரியான காரணத்தை அடையாளம் காணப் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா