மெல்பெர்ன், மார்ச் 4 – ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸின் அழைப்பின் பேரில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்நாட்டிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு மெல்பெர்ன் வந்தடைந்தார்.
பிரதமர் அன்வார் மற்றும் அவரின் துணைவியார் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை ஏற்றிய சிறப்பு விமானம் மெல்பெர்ன் ஜெட் பேஸ் சர்வதேச விமான நிலையத்தில் இரவு உள்ளூர் நேரப்படி 10.40 மணிக்குத் தரையிறங்கியது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 2வது மலேசியா – ஆஸ்திரேலிய வருடாந்திர தலைவர்கள் கூட்டம் (ஏ.எல்.எம்.) மற்றும் நாளை 5 மற்றும் 6ஆம் வரை நடைபெறும் ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டிற்கு மலேசியா பேராளர் குழுவுக்கு அன்வார் தலைமை தாங்குவார்.
இந்த ஏ.எல்.எம். கூட்டத்தின் போது வர்த்தகம், முதலீடு, கல்வி, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான விவேகப் பங்காளித்துவ கட்டமைப்பின் கீழ் பரந்த அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான்-ஆஸ்திரேலியா கலந்துரையாடல் பங்காளித்துவத்தின் 50வது ஆண்டு நிறைவை நினைவுக்கூறும் வகையில் இந்த ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாடு நடத்தப்படுகிறது.
இதில் ஆசியான் மற்றும் ஆஸ்திரேலியாவின் தற்போதைய ஒத்துழைப்பின் நிலையை மதிப்பாய்வு செய்து, ஆற்றல் மாற்றம், மனித மூலதன மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பு விவாதிக்கும்.
இந்த சிறப்பு உச்சி மாநாட்டில் ஆசியான்-ஆஸ்திரேலியா தலைவர்களின் தொலைநோக்கு மெல்பெர்ன் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், ஆசியான்-ஆஸ்திரேலியா விவேக பங்காளித்துவத்தின் திசையை மேலும் முன்னேற்ற வழிகாட்டும் ஆவணங்களாக ஏற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.