கோல லங்காட், மார்ச் 11- இந்நாட்டிலுள்ள தாய்மொழி பள்ளிகளின் கல்விச் சூழலியல் முறையில் சீரமைப்புச் செய்யும் திட்டத்தை கல்வியமைச்சு கொண்டிருக்கவில்லை.
நாட்டிலுள்ள தாய்மொழி கல்வி சூழியல் முறையை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் முகமது அக்மால் சாலே கடந்த 9ஆம் தேதி செய்துள்ள பரிந்துரையை அமைச்சு கவனத்தில் கொள்வதாக கல்வியமைச்சர் ஃபாட்டிலினா சீடேக் கூறினார்.
நடப்பு கல்வி சூழியல் முறையில் மறுசீரமைப்பு செய்வது தொடர்பான எந்த முடிவு அல்லது நடவடிக்கையும் கல்விச் சட்டத்தில் உள்ள ஷரத்துகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய கண்ணோட்டங்களை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். எனினும், தற்போது வரை கல்விச் சட்டத்தை நிலைநிறுத்துவதில் கல்வியமைச்சு உறுதியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியது போல் தாய்மொழி பள்ளிகள் கல்விச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தோடு அதனை நாங்கள் தொடர்ந்து நிலை நிறுத்துவோம் என்று 2024/2025 கல்வித் தவணையின் முதல் நாளான இன்று சௌஜானா தேசியப் பள்ளிக்கு வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மாணவர்கள் மத்தியில் மலாய் மொழியின் புலமையை வலுப்படுத்தும் அதேவேளையில் தேசியவாத அம்சங்களைப் புகுத்துவதன் மூலம் உள்ளுர் கல்விச் சூழல் அமைப்பு மீது விரிவான ஆய்வினை மேற்கொள்ளுமாறு மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான அக்மால் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.