NATIONAL

மளிகைக் கடையில் கொள்ளையிட்ட ஆடவர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலம், ஏப் 17- தெலுக் பங்ளிமா காராங், கெபுன் பாருவில் உள்ள
மளிகைக் கடை ஒன்றில் பாராங்கத்தியைப் பயன்படுத்தி கொள்ளையிட்ட
இரு கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட கடையின்
உரிமையாளரிடமிருந்து தாங்கள் நேற்று மாலை 3.00 மணியளவில்
புகாரைப் பெற்றதாகக் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்வான் முகமது நோர் சாலே கூறினார்.

சட்டையினால் முகத்தை முழுமையாக மூடியிருந்த ஆடவன் ஒருவன்
கடையினுள் நுழைந்த வேளையில் மற்றொரு நபர் காரில் காத்திருந்தது
தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

பாராங்கத்தியேந்திய அந்த ஆடவன் பணம் வைக்கப்பட்டிருந்த கடையின்
கல்லாப் பெட்டி டிராயர், இரு பள்ளிவாசல் நன்கொடை உண்டியல்கள்
மற்றும் கடை ஊழியருக்குச் சொந்தமான கைப்பேசி ஆகியவற்றுடன்
காரில் ஏறி தப்பியதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் அக்கடையின் உரிமையாளருக்குச் சுமார்
3,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 395/397
பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய
அவர், இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 03-31872222 என்ற
எண்களில் கோல லங்காட் மாவட்ட காவல் நிலையத்தின் நடவடிக்கை
அறை அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு
கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


Pengarang :