NATIONAL

பேருந்தை செலுத்தும் போது டிக்டாக்கை பயன்படுத்தினர்- மூன்று ஓட்டுநர்களுக்கு ஜே.பி.ஜே. சம்மன்

அலோர் ஸ்டார், ஏப் 24- பேருந்தைச் செலுத்திக் கொண்டே வீடியோ கால்
மற்றும் டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த மூன்று விரைவு பேருந்து
ஓட்டுநர்கள் பயணிகள் போல் வேடமிட்ட சாலை போக்குவரத்து
அதிகாரிகளிடம் (ஜே.பி.ஜே.) வசமாகச் சிக்கினர்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி 20ஆம்
தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது
சம்பந்தப்பட்ட மூன்று பேருந்து ஓட்டுநர்களும் பிடிபட்டனர்.

கடந்த ஏப்ரல் 1 மற்றும் 18ஆம் தேதிக்கு இடையில் இங்குள்ள சஹாப்
பெர்டானா பஸ் முனையத்திற்கும் ஈப்போ மற்றும் கோலாலம்பூருக்கும்
இடையே பயணச் சேவையை மேற்கொண்டிருந்த போது 52 முதல் 54
வயது வரையிலான அம்மூவரும் இக்குற்றத்தைப் புரிந்தது கண்டு
பிடிக்கப்பட்டனர் என்று கெடா மாநில சாலை போக்குவரத்து இலாகாவின்
துணை இயக்குநர் ஷஹாருள் அஸார் மாட் டாலி கூறினார்.

இத்தகைய குற்றங்கள் தொடர்பில் நாங்கள் விரைவு பேருந்து
நடத்துநர்களிடம் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். இருந்த
போதிலும், இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.
இச்செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என்பதால் அந்த
ஓட்டுநர்களுக்கு எதிராக குற்றப்பதிவு வெளியிடப்பட்டது என அவர்
குறிப்பிட்டார்.

தொலைத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியதற்கு அவர்கள்
கொடுக்கும் காரணம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. இந்த
விஷயத்தில் பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு மிகவும்
குறைவாக உள்ளதோடு நாம் எதிர்பார்த்தை அளவை எட்டவில்லை
என்றும் அவர் சொன்னார்.

மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இந்த விவகாரத்தை தாங்கள்
பொது தரை போக்குவரத்து நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டுச்
செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நோன்புப் பெருநாள் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது 54,821
வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு பல்வேறு குற்றங்களுக்காக 432
வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டன. வானமோட்டும் லைசென்ஸ்
இல்லாதது, சாலை வரியைப் புதுப்பிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக
10,151 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டன என்றார் அவர்.


Pengarang :