கோலாலம்பூர், மே 15 – தீபகற்ப மலேசியாவுக்கான சொத்துடைமை மேம்பாட்டு மசோதா அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
சில்லறை, வணிகம், சோஹோ (சிறிய அலுவலகம், வீட்டு அலுவலகம்) மற்றும் மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய கலவையான வளர்ச்சி சூழலை உள்ளடக்கிய நவீன பாணியுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் இந்நடவடிக்கை சரியான நேரத்தில் அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்தச் திட்டம் மிகவும் விரிவானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். மேலும் பொறுப்புகளையும் அதிகரிக்கும் என்று இந்த யோசனையை முன்வைத்தவருமான ங்கா தெரிவித்தார்.
கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வரும் வீட்டு வசதி மேம்பாட்டு உரிமச் சட்டம் குடியிருப்புச் சொத்துகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.புதிய சட்டத்தின் மூலம் சொத்து வாங்குபவர்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் நில உரிமையாளர்களின் நலன்களும் பாதுகாக்கப்படும்.
இந்த சட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதன் தொடர்பில் அமைச்சு அனைத்து பங்களிப்பாளர்களுடனும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளது என்றார் அவர்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சில் நாங்கள் மூன்று திறந்த கொள்கைகளைக் கொண்டுள்ளோம் – திறந்த போக்கு, திறந்த மனம் மற்றும் திறந்த இதயம் – எனவே நாங்கள் அனைத்து புதிய யோசனைகளுகையும் வரவேற்கத் தயாராக உள்ளோம். சொத்து வாங்குவோர் மற்றும் மேம்பாட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் நியாயமான மற்றும் சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
வீடுகளை வாங்க முடியாதவர்களுக்கு குடியிருப்புகளை வாடகைக்கு விடும் பரிந்துரை குறித்து கருத்துரைத்த அவர், மேம்பாட்டாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் அரசாங்கம் நியாயமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
லாபத்தை ஈட்டும் அதே வேளையில் மேம்பாட்டாளர்கள் நிறுவன சமூகப் பொறுப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.