NATIONAL

வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 100 மரங்கள் நடப்பட வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், மே 15 – வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக  100 மரங்கள் கண்டிப்பாக நடப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ கமருல்ஜமான் மாட் சாலேவுக்கு தாம் இந்த அறிவுறுத்தலை வழங்கியதாக அன்வார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டப் பதிவில்  கூறினார்.

வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் கூடுதலாக 100 மரங்கள் நட வேண்டும் என்று டத்தோ பண்டாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என அவர் சொன்னார்.

சமீபத்தில் நாட்டில் நிகழ்ந்த மரங்கள் முறிந்து விழும் சம்பவங்களுக்குப் பிறகு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (டி.பி.கே.எல்.) நடவடிக்கைகள் குறித்து பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபாவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட  செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக  அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.

அத்தகையச்  சம்பவங்களுக்குப் பிறகு அதிக ஆபத்துள்ள மரங்களை வெட்டுவதற்கான  நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாக டாக்டர் ஜாலிஹா கூறியிருந்தார்.

இத்தகைய் சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய நிழல் மர மேலாண்மைத் திட்டத்தை மேம்படுத்தவும்  முதிர்ந்த  அல்லது அதிக ஆபத்துள்ள மரங்களுக்கான புதிய வழிகாட்டியைத்  தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்த வழிகாட்டி வரும் ஜூலை மாதம் தயாராகிவிடும் என்றும் டாக்டர் ஜாலிஹா தெரிவித்திருந்தார்.


Pengarang :