ANTARABANGSA

ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிப்பு- ஈரான் அதிபர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

துபாய், மே 20- உறைபனிக்கு மத்தியில் மலைச்சாரல் பகுதியில் நிகழ்ந்த
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைஸி மற்றும்
வெளியுறவு அமைச்சர் உயிர்த் தப்பியிருக்க க்கூடும் என்ற நம்பிக்கை
குறைந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

அதிபர் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து விட்டது.
பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சுகிறோம் என
அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்களைக் கண்டோம். நிலைமை
சாதகமானதாக இல்லை என்று ஈரானிய செம்பிறைச் சங்கத்தின் தலைவர்
பிர்ஹூசேன் கோலிவாண்ட் ஸ்டார் டிவியிடம் தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில்
ஹெலிகாப்டரில் பயணம் செய்வதவர்களில் யாரும் உயிர்ப்
பிழைத்ததற்கான அறிகுறி தென்படவில்லை என்று அவர் மேலும்
சொன்னார்.

கிழக்கு அஜர்பைஜான் மாநிலத்தில் விபத்து நிகழ்ந்த இடத்தை
அடைவதற்கு முன் உறைபனி மற்றும் கடுமையான மலைச்சரிவை
கடக்க வேண்டிய சூழலை மீட்புப் பணியாளர்கள் எதிர்கொண்டனர்.

அறுபத்து மூன்று வயதான ரைஸி கடந்த 2021ஆம் ஆண்டு ஈரானிய
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவிக்கு வந்தது முதல் நன்னெறிச்
சட்டங்களை அவர் கடுமையாக்கியதோடு அரசாங்க எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். மேலும் உலக
நாடுகளுடனான அணுவாயுதப் பேச்சுகளிலும் கடுமையானப் போக்கை
கடைபிடித்தார்.

ஈரானிய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் அணுவாயுத அதிகாரத்தை
தன்வசம் வைத்திருக்கும் ஈரானிய ஆன்மிகத் தலைவரான அயோத்துல்லா அலி கெமேய்னி, அரசாங்க விவகாரங்களில் இந்த சம்பவம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.


Pengarang :