SELANGOR

ஷா ஆலம் டத்தோ பண்டாராக டத்தோ பவுஸி நியமனம்- ஜூன் 4ஆம் தேதி பதவியேற்கிறார்

ஷா ஆலம், மே 31- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் டத்தோ  பண்டார் டத்தோ பவுஸி முகமது யாத்திம் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டாராக வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி பதவியேற்கிறார்.

நேற்று நடைபெற்ற சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் கூட்டத்திற்கு இறுதியாக தலைமையேற்ற போது இந்த தகவலை அவர் வெளியிட்டார். தமது பதவி காலத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பணியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நான் பதவியில் இருந்த போது எனக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தில் பணியாற்றிய நினைவுகள் என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும் என அவர் சொன்னார்.

இதனிடையே, வாரிசான் எம்.பி.எஸ்.ஜே. 2024 குழு இசை மற்றும் பாரம்பரிய கலாசார நடன பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கும்படி தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

பாடாட் எனப்படும் மலாய் பாரம்பரிய மற்றும் கலாச்சார கழகம், டெலியன் ஸ்டூடியோ ஆகியவற்றின் ஆதரவிலான இந்த பயிற்சிப் பட்டறை காம்ப்ளக்ஸ் 3கே எஸ் எஸ் 13 ல்  நடைபெறும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :