கோலாலம்பூர், மே 31 – அரச தந்திர உறவுகளின் 50வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடும் மலேசியா மற்றும் சீனா இடையே உறவை தொடர்ந்து வளர்க்கும் கடப்பாட்டை மடாணி அரசு கொண்டுள்ளது.
தூதரக உறவுகளை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டதன் மூலம் மலேசியாவும் சீனாவும் ஆசிய புவிசார் அரசியலின் வடிவமைப்பை கடந்த 1974ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி மறுவடிவமைத்தன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பிரிவை இணைக்கும் தென்கிழக்காசியாவின் முதல் சோசலிசம் அல்லாத நாடாக மலேசியா விளங்கியது.
இந்த உறவைத் தவிர்ப்பதற்கான வெளிப்படையான காரணங்கள் இருந்த போதிலும் சித்தாந்த இடைவெளி, சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகளுக்கு மத்தியில் எங்கள் தலைவர்கள் மரபுகளைத் தாண்டி சிந்திக்கத் துணிந்தனர். இந்த துணிச்சலான நடவடிக்கை ஆக்ககரமான மற்றும் பயனுள்ள கூட்டணியாக மலர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் செழிப்பான வளர்ச்சிக்காக இந்த முக்கிய உறவை வளர்ப்பதில் மடாணி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்.
இந்த வரலாற்று மைல் கல் உறவைக் கொண்டாட சீனப் பிரதமர் லீ கியாங்கின் அதிகாரப்பூர்வ மலேசியப் பயணத்தை தாம் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.