NATIONAL

மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நேர்ந்த துயரம்- ஆற்றில் வழுக்கி விழுந்து ஆடவர் மரணம்

ஷா ஆலம், ஜூன் 7- மீன் பிடித்துக் கொண்டிருந்த உள்நாட்டு ஆடவர்
ஒருவர் திடீரென ஆற்றில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இத்துயரச்
சம்பவம் இங்குள்ள செக்சன் 16, கம்போங் பாடாங் ஜாவா மதகுப் பகுதியில்
நேற்று மாலை நிகழ்ந்தது.

உயிரிழந்த அந்த 26 வயது ஆடவரின் உடலை செக்சன் 15, தீயணைப்பு
மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் நேற்றிரவு 7.15 மணியளவில் சம்பவ
இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் கண்டு பிடித்தனர்.

சக நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞர் தாம்
அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து மேலே வர முற்பட்ட போது வழுக்கி
ஆற்றில் விழுந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக
ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால்
இப்ராஹிம் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய
அவர், இறந்த இளைஞரின் உடல் சவப்பரிசோதனைக்காக கிள்ளான், துங்கு
அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது
என்றார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.29
மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தேடி மீட்கும் பணியை
தாங்கள் முடுக்கி விட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில்
தெரிவித்தார்.

சுமார் இரண்டு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைக்குப்
பின் அந்த இளைஞரின் உடலை நீர் மீட்புக் குழுவினர் கண்டு பிடித்தனர்
என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :