NATIONAL

கே.கே.பி. தொகுதியில் மாபெரும் ஹஜ்ஜூப் பெருநாளை விற்பனை- 1,500 கோழிகளை மலிவு விலையில் வாங்க வாய்ப்பு

ஷா ஆலம், ஜூன் 10- ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும்
சனிக்கிழமை கோல குபு பாரு தொகுதியில் மாபெரும் ஏஹ்சான் ரஹ்மா
மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு 1,500 கோழிகள், 600 பாக்கெட் அரிசி, 144 போத்தல் சமையல்
எண்ணெய், 600 தட்டு முட்டை, 400 பாக்கெட் மீன், 400 பாக்கெட் இறைச்சி
விற்பனைக்கு வைக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாங்
சோக் தாவ் கூறினார்.

கோல குபு பாரு மக்களுக்கு நற்செய்தி. மெகா ஹஜ்ஜூப் பெருநாள்
ஏஹ்சான் ரஹ்மா மடாணி விற்பனை வரும் சனிக்கிழமை இந்த
தொகுதியில் நடைபெறவுள்ளது. மகத்தான விலை குறைப்பு உங்களுக்காக
காத்திருக்கிறது. திரளாக வாருங்கள் என அவர் தனது பேஸ்புக் பதிவில்
கூறியுள்ளார்.

ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுவதில் பொது மக்கள் எதிர்நோக்கும்
சுமையைக் குறைப்பதற்கு அப்பெருநாளை முன்னிட்டு மாபெரும் ஏஹ்சான்
ரஹ்மா விற்பனையை மாநில அரசு வார இறுதியில் நடத்தவுள்ளது என்று
விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹஷாம் ஹஷிம்
நேற்று கூறியிருந்தார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த
விற்பனை வரும் சனிக்கிழமை சுங்கை துவா, கோல குபு பாரு, போர்ட்
கிள்ளான், ஆகிய தொகுதிகளில் நடைபெறும்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி
வரை பாண்டான் இண்டா, தஞ்சோங் சிப்பாட் மற்றும் டுசுன் துவா ஆகிய
தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி
கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இவ்வார இறுதி நாட்களில் செகி ப்ரெஷ் பேராங்காடிகளில் நடைபெறும் மலிவு
விற்பனையுடன் சேர்த்து இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் 1,800க்கும்
மேற்பட்ட இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையை நடத்த சிலாங்கூர்
மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம்
முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர்
பயனடைந்துள்ளனர்.

கடந்தாண்டு நோன்புப் பெருநாளின் போது மலிவான விலையில் கோழி
மற்றும் முட்டையை மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை
செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்
பெற்றது.

ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை
பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள
கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது
http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து
கொள்ளலாம்.


Pengarang :