மலாக்கா, ஜூன் 13 – இம்மாதத் தொடக்கத்தில் மலாக்கா மற்றும் பேராக்கில் பெட்ரோல் குண்டுகளை வீசி கீழறுப்புச்செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட உள்ளூர் நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
அந்த 25 வயது சந்தேக நபர் கோலாலம்பூர், தாமான் கோக் லியாங்கில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஜைனோல் சமா கூறினார்.
அண்டை நாடுகளிலிருந்து செயல்படும் உரிமம் பெறாத கடன் வழங்கும் கும்பல்களுடன் அந்த ஆடவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
பெட்ரோல் வெடிகுண்டுத் தாக்குதல் காரணமாக தனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பில் அலோர் காஜா, மஸ்ஜிட் தானாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையில் செய்த புகாரைத் தொடர்ந்து அச்சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் கடந்த ஒரு மாதக் காலமாக அண்டை நாட்டிலிருந்து செயல்படும் கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த ஆடவர் சித்தியவானிலும் இதே போன்ற கீழறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
கைதான ஆடவரிடமிருந்து டோயோட்டா அன்சர் ரக கார், கைப்பேசி மற்றும் ஒரு ஜோடி ஆடைகளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக ஜைனோல் தெரிவித்தார்.