சிரம்பான், ஜூன் 14 – இங்குள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஓய்வுப் பகுதியில்
உள்ள கழிப்பறையில் போலீஸ்காரர் ஒருவர் இறந்த நிலையில்
கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.45 மணியளவில் பொது
மக்களிடமிருந்து தாங்கள் தகவலைப் பெற்றதாக நீலாய் மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹசிம் கூறினார்.
இருபத்தைந்து வயதுடைய அந்த போலீஸ்காரர் திருமணமானவர் என்பது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறிய அவர்,
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றும் காவலர் என்பது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
நெகிரி செம்பிலான் மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் தடயவியல்
துறை சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனையில் அந்த ஆடவரின்
உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தது என்று
அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இறந்த
நபரின் உடல் சவப்பரிசோதனைக்காகத் துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்குக்
கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.