ஜெனிவா, ஜூன் 22:- காஸா பகுதியில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் கடந்த வெள்ளிக்கிழமை வெடித்துச் சிதறிய வெடிகுண்டு, அந்த வளாகத்தில் தஞ்சமடைந்திருந்த 22 பேரின் உயிரைக் பலி கொண்டதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.
அந்த வெடிகுண்டு எங்கள் பாலஸ்தீனிய சகாக்கள் உட்பட நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த பொதுமக்களால் சூழப்பட்ட இடத்தில் அமைத்திருந்த அந்த ஐ.சி.ஆர்.சி . கட்டிடத்தின் கட்டமைப்பைச் சேதப்படுத்தியது என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் கூறியது.
இச்சம்பவத்தால் அருகிலுள்ள செஞ்சிலுவைச் சங்கக் கள மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்ததோடு மேலும் 45 பேர் காயமடைந்தனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
செஞ்சிலுவைச் சங்க கட்டிட வளாகத்திற்கு மிக நெருக்கமான இடத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், பொதுமக்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சமீபத்திய நாட்களில் நிகழ்ந்த பல சம்பவங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதற்கு முன்னர் இலக்கு தவறிய குண்டுகள் ஐ.சி.ஆர்.சி. கட்டமைப்புகளைத் தாக்கின.
மனித உயிருக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என்று ஐ.சி.ஆர்.சி தெரிவித்துள்ளது.
மோதலில் ஈடுபடும் தரப்பினர் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மனிதாபிமான வசதிகள் உட்பட பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச சட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சி குறிப்பிட்டது.