புக்கிட் மெர்தாஜம், ஜூலை 11- இங்குள்ள தாமான் ஸ்ரீ ரம்பாய் வீடமைப்பு
பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இரு பெண்கள்
இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர்.
அப்பெண்களின் உடல்களை அவ்வழியே சென்ற பொது மக்கள் நேற்று
மாலை 5.30 மணியளவில் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
பூட்டப்பட்ட அக்காரின் கதவைத் திறப்பதற்கு உதவி கோரி பெறப்பட்ட
அழைப்பைத் தொடர்ந்து பெர்டா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பினாங்கு மாநில
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சுய பாதுகாப்பு உடைகளை (பி.பி.இ.) அணிந்திருந்த அந்த தீயணைப்பு
வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரின் கதவைத் திறந்தனர்
என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அக்காரின் முன் இருக்கைகளில் அமர்ந்த நிலையில் இரு பெண்கள்
இறந்து கிடப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். இதனைத் தொடர்ந்து
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது என்று
அவர் குறிப்பிட்டார்.
இருபது வயது மதிக்கத்தக்க அவ்விரு பெண்களும் ஐந்து நாட்களுக்கு
முன்னர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகக் கூறிய அவர்,
எனினும் அவர்களின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை
என்றார்.
அவ்விருவரின் உடல்களும் சவப்பரிசோதனைக்காகப் புக்கிட் மெர்தாஜம்
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.