NATIONAL

மனநலம் பாதிப்பட்டவர்கள் எண்ணிக்கையில் கிள்ளான் மாவட்டம் முதலிடம்

ஷா ஆலம், ஜூலை 11 – சிலாங்கூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பதிவான  மாவட்டமாக கிள்ளான் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த 2020 மற்றும் 2024 க்கு இடையே ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 500 பேர்  பொது சுகாதார கிளினிக்குகளில் அந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாழ்க்கையில்  மன உறுதியைக் குறைத்து அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார சிக்கல்கள், குடும்பம் மற்றும் திருமண பிரச்சினைகள் மற்றும் பணியிட சவால்கள் ஆகியவை இதற்கு  முக்கிய காரணங்களாக விளங்குகின்றன என்று பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

வாழ்க்கைச் சவால்களைச் எதிர்கொள்வதற்கு ஏதுவாக  இத்தகைய  நபர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து சமூக ஆதரவைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கூடுதலாக,  வாழ்க்கை முறையும் இதில்  குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. சிலர் மன அழுத்தத்தை சமாளிக்கப் போராடுவததோடு  போதைப் பழக்கத்தில்  ஈடுபாடு கொண்டவர்களாகவும்   உடலாரோக்கிய நடவடிக்கைகளில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் உள்ளனர் அவர் இன்று மாநில சட்டமன்றத்தில் கூறினார்.

மனநல நோயாளிகளின் எண்ணிக்கையில் பெட்டாலிங் மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.  இங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 400 நோயாளிகள்  சிகிச்சைக்காக வருகின்றனர். அதைத் தொடர்ந்து மூன்றாவது  இடத்தில் சிப்பாங் மாவட்டம் (300 நோயாளிகள்) உள்ளது என்றார் அவர்.

மற்ற மாவட்டங்களில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 70 முதல் 200 சம்பவங்கள்  பதிவு செய்யப்படுகின்றன என்றார்.

2023 ஆம் ஆண்டு தேசிய உடல்நலம் மற்றும் நோயியல் ஆய்வின் முடிவுகள் குறித்து பேசிய ஜமாலியா,   15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய  மலேசியர்களில் 4.6 சதவீதம் பேர் (10 லட்சம்) மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சொன்னார்.


Pengarang :