NATIONAL

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்த நபர் மரணம்

சிப்பாங், ஜூலை 15: பாகான் லாலாங் கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அந்நபர் (27) தனது உறவினருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மாலை 5 மணியளவில் நடந்ததாகச் சிப்பாங் மாவட்டக் காவல்துறை தலைவர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோவ் தெரிவித்தார்.

“இச்சம்பவம் குறித்து மாலை 5.16 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையினர் அப்பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணியளவில் அந்த நபரின் உடல் பாகான் லாலாங் கரையோரப் பகுதியில் மிதந்து கொண்டிருந்ததை சில மீனவர்கள் கண்டு தகவல் கிடைத்தது.

மாலை 6.20 மணி அளவில் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது.

பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :