ANTARABANGSA

வளர்ப்பு மகளுக்கு உணவு கொடுக்காமல் அடைத்து வைத்து சித்திரவதை- பெண் கைது

கோத்தா பாரு, ஜூலை 22- ஒன்பது வயது வளர்ப்பு மகளை சித்திரவதை
செய்த சந்தேகத்தின் பேரில் மாது ஒருவரை போலீசார் கைது
செய்துள்ளனர்.

கோக் லானாஸ், தாமான் யீக் பெர்டனாவிலுள்ள வீடொன்றில் நிகழ்ந்த
இந்த சித்திரவதை தொடர்பில் அந்தச் சிறுமியின் தந்தையான 30 வயது
ஆடவரிடமிருந்து கடந்த வியாழக்கிழமை புகார் கிடைக்கப் பெற்றதைத்
தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டதாக கோத்தா பாரு மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ரோஸ்டி டாவுட் கூறினார்.

அச்சிறுமியின் தந்தை கடந்த 10ஆம் தேதி வேலை நிமித்தம் கோலாலம்பூர்
சென்றிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
கடந்த 12ஆம் தேதி வீடு திரும்பிய தந்தை அச்சிறுமியின் தலை, கை
மற்றும் கண்ணில் வீக்கம் காணப்பட்டதை தொடர்ந்து அவர்
துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதை அறிந்ததாக முகமது ரோஸ்டி
சொன்னார்.

அச்சிறுமியை குளியலறைக்கு கொண்டுச் சென்ற அந்த மாது அவரின்
தலையை சுவற்றில் மோதியதோடு இரு கைகளையும் காலால் மிதித்தது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் அறிக்கை
ஒன்றில் கூறினார்.
மேலும், அந்த சிறுமிக்கு உணவு, நீர் கொடுக்காமல் மறுநாள் வரை
அவரை குளியலறையில் அம்மாது அடைத்து வைத்திருந்தார் எனவும்
அவர் குறிப்பிட்டார்.

2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணைக்காக
அந்த மாது வரும் செவ்வாய்க்கிழமை வரை தடுப்புக் காவலில்
வைக்கப் பட்டுள்ளார் என்றும் அவ்ர் தெரிவித்தார்.


Pengarang :