குவா மூசாங், ஜூலை 22 – அடுத்த மாதம் நடைபெறவுள்ள நெங்கிரி இடைத்தேர்தலில் பாரிசான் நேசனல் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளுடன் பார்ட்டி அமானா நெகாரா (அமானா) ஒத்துழைத்து வருகிறது.
தேசிய முன்னணி வேட்பாளருக்கும் அவர்களின் பிரச்சார இயந்திரத்திற்கும் அமானா உதவும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
நெங்கிரி இடைத்தேர்தலில் நாம் ஒரு அணியாக இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். இன்று நாங்கள் தேர்தல் இயந்திரத்தைத் தொடக்கினோம். எங்கள் வேட்பாளர் வெற்றி பெறும் வரை தினமும் எங்கள் முயற்சிகளை அதிகரிப்போம் என்று அவர் ஹராப்பான் தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நெங்கிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அஸிசி அபு நயீமின் பெர்சத்து உறுப்பினர் அந்தஸ்து கடந்த ஜூன் 13ஆம் தேதி ரத்து செய்யப் பட்டதைத் தொடர்ந்து அத் தொகுதி காலியானதாக கிளந்தான் மாநில சட்டமன்றத் தலைவர் டத்தோ முகமது அமார் நிக் ஜூன் 19 அன்று அறிவித்தார்.
இத்தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆகஸ்டு 17 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆகஸ்டு 3 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கலும் 13 ஆம் தேதி முதல் கட்ட வாக்களிப்பும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.