கோலாலம்பூர், ஜூலை 28- ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்திலுள்ள வீடொன்றில் நேற்று ஏற்பட்டத் தீவிபத்தில் மாது ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொரு ஆடவருக்கு வலது கையில் தீக்காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தாமான் லெம்பா மாஜூ, ஜாலான் மாஜூ 1/11இல் உள்ள கார்டன் டூவர் அப்பாட்மெண்டில் நேற்றிரவு நிகழ்ந்தது.
இந்த தீவிபத்து தொடர்பில் தேற்றிரவு 9.46 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பாண்டான் இண்டா தீயணைப்பு நிலையத்திலிருந்து 12 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
உடலில் ஏற்பட்ட 80 விழுக்காட்டு தீக்காயங்கள் காரணமாக 28 வயது உள்நாட்டுப் பெண் உயிரிழந்ததாக அவர் சொன்னார்.
அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்திய வேளையில், காயமுற்ற ஆடவர் சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இதனிடையே, இந்த தீவிபத்தில் அந்த ஐந்து மாடி குடியிருப்பின் கீழ்த்தளத்திலுள்ள ஒரு வீடு பாதிக்கப்பட்ட நிலையில் இதர வீடுகள் இதில் பாதிக்கப்படவில்லை என்று நடவடிக்கை கமாண்டர் அம்ரான் மூடா தெரிவித்தார்