NATIONAL

வங்காளதேசப் பயணத்தை ஒத்தி வைக்குமாறு மலேசியர்களுக்கு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்து

புத்ராஜெயா, ஆக. 8 – வங்காளதேசத்தில் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தால் அந்நாட்டிற்கான பயணத்தை ஒத்தி வைக்குமாறு மலேசியர்களை தாங்கள் கேட்டுக் கொள்வதாக வெளியுறவு அமைச்சு கூறியது.

டாக்காவிலுள்ள மலேசிய தூதரகத்தின் வாயிலாக வங்காளதேசத்தின் நிலவரங்களை தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

வங்காளதேசத்தின் நிர்வாகம் வழக்கம் போல் செயல்படுவதை உறுதி  செய்யும் வகையில் அங்கு புதிய இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதாக வெளிவந்த தகவல் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

வங்காளதேசத்தில் இருக்கும் மலேசியர்கள் தங்கள் விபரங்களை டாக்காவிலுள்ள மலேசிய தூதரகத்தில் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்நாட்டிலுள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில் கலவரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றி நடக்கும் படி அமைச்சு கேட்டுக் கொண்டது.

அந்நாட்டின் சமீபத்திய நிலவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும் எனவும் அது தெரிவித்தது.

ஆபத்து, அவசர வேளைகளில் அங்குள்ள மலேசியர்கள்  House No. 19, Road No. 6, Baridhara Diplomatic Enclave, Dhaka– 1212, என்ற முகவரியில் அல்லது +880241081892 / 1895 dan +88 018 4179 8077 (அவசர வேளையில் மட்டும்)  அல்லது  [email protected] என்ற மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.

அரசாங்க வேலை வாய்ப்புகளில் அமல்படுத்தப்பட்ட கோட்டா முறையை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் தொடங்கிய போராட்டத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.


Pengarang :