NATIONAL

சுக்மா போட்டியில் பங்கேற்கும் சிலாங்கூர் கபடிக் குழுவுக்கு பிரகாஷ், கோபிந்த் சிங் வெ.10,000 வெள்ளி நன்கொடை

(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஆக 13- விரைவில் நடைபெறவிருக்கும் மலேசிய
விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) பங்கேற்கவிருக்கும் சிலாங்கூர் கபடிக்
குழுவுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ்
மற்றும் டிஜிட்டல் அமைச்சரும் டாமன்சாரா நாடாளுமன்ற
உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ ஆகியோர் தலா 5,000 வெள்ளியை
நன்கொடையாக வழங்கினர்.

சுக்மாவில் இடம் பெற்றுள்ள இந்திய பாரம்பரிய விளையாட்டான கபடிப்
போட்டியில் பங்கேற்கும் சிலாங்கூர் குழுவினருக்கு உரிய ஆதரவை
வழங்கும் அதேவேளையில் அந்த விளையாட்டின் முக்கியத்துத்தையும்
அதன் மீதான ஆர்வத்தையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக்
கொண்டு இந்த நிதி வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்
கூறினார்.

நவீன விளையாட்டுகள் மற்றும் கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள்
என்ற பேதமின்றி அனைத்து விளையாட்டுகளுக்கும் ஆதரவு தருவதை
மாநில அரசும் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தாமும் கடப்பாடு
கொண்டுள்ளோம். அதே சமயம் விளையாட்டுகளின் பின்னணி மற்றும்
இனம் சார்ந்த விளையாட்டாளர்களின் பங்கேற்பை நாங்கள் கருத்தில்
கொள்வதில்லை. மாறாக, மக்களை ஒன்றிணைக்கும் ஒரு அங்கமாக
இதனைப் பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.

ஆகவே, குறிப்பிட்ட ஒரு இனம் சார்ந்த விளையாட்டுகளின் மீது தாங்கள்
காட்டி வரும் அக்கறையை அரசியலாக்கவோ அடிப்படையற்ற
குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட
தரப்பிரை அவர் கேட்டுக் கொண்டார்.

கபடிப் போட்டியில் அதிகளவிலான இளைஞர்கள் பங்கேற்பது குறித்து
மகிழ்ச்சி தெரிவித்த அவர், இதன் மூலம் பாரம்பரிய விளையாட்டுகள்
புத்துயிர் பெறுவதற்கும் ஆரோக்கியமான நடவடிக்கைகளில் அவர்கள்
தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பும் கிட்டுகிறது என்றார்
அவர்.

சிலாங்கூர் குழுவின் கடுமையானப் பயற்சி, உறுதியான மனோதிடம்,
முழுமையான தயார் நிலை ஆகியவை சுக்மா போட்டியில் அக்குழு
சிறப்பான வெற்றியைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் எனத்
தாம் நம்புவதாகவும் பிரகாஷ் குறிப்பிட்டார்.

Pengarang :