NATIONAL

சூராவ் கழிப்பறையில் இருவர் கத்தியால் குத்தப்பட்டச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது

கோலாலம்பூர், ஆக. 13- கிளானா ஜெயாவில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் விற்பனை முகவர் ஒருவர் ரேம்போ கத்தியால் குத்திக் காயப்படுத்தப்பட்டச் சம்பவம் தொடர்பில், போலீசார் ஒரு சந்தேக நபரை இன்று விடியற்காலை 1.30 மணியளவில் காஜாங்கில் கைது செய்தனர்.

அறிமுகமான ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த அந்த 46 வயது உள்நாட்டு ஆடவரை காவல் துறை உறுப்பினர்கள் கைது செய்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருள்நிஸாம் ஜாபர் கூறினார்.

விசாரணைக்காக அந்த ஆடவரைத் தடுத்து வைப்பதற்கான அனுமதி இங்குள்ள பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் இன்று பெறப்படும் என்ற அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் பெட்டாலிங் ஜெயா, கிளானா ஜெயாவிலுள்ள அல்-ஏஷானியா அஹ்மதியா சூராவிலுள்ள கழிப்பறையில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்தது.

அந்த ஆடவரின் தாக்குதலில் 26 வயதுடைய விற்பனை முகவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்ட வேளையில் 52 வயதான தலைமையாசிரியர் கைகளில் காயங்களுக்குள்ளானார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 307 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இதுவரை ஏழு சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.


Pengarang :