NATIONAL

காயமடைந்த பாலஸ்தீனர்களை மலேசியா கொண்டு வர இரு இராணுவ விமானங்கள் எகிப்து புறப்பட்டன

கோலாலம்பூர், ஆக 15 – போரில் காயமடைந்த பாலஸ்தீனர்களை சிகிச்சைக்காக மலேசியா கொண்டு வருவதற்காக அரச மலேசிய ஆகாயப் படையின் இரு ஏர்பஸ் ஏ-400 எம் விமானங்கள் நேற்று எகிப்து நாட்டின் அல்-மாஸா விமானப் படைத் தளம் நோக்கிப் புறப்பட்டன.

இத்தகவலை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் நேற்று பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார். இவ்விவகாரம் தொடர்பான விரிவான விபரங்கள் இவ்வாரத்தில் வெளியிடப்படும் என அவர் சொன்னார்.

வரும் வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அப்போது முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

போரில் காயமடைந்த பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர்களை மலேசிய கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த 4ஆம் தேதி கூறியிருந்தார்.

இங்குள்ள புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரேனா அரங்கில் நடைபெற்ற பாலஸ்தீன விடுதலைப் பேரணியில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :