கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 – பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் உலக விளையாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு வீரர்களின் பங்கேற்பை மேம்படுத்துவதில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (KBS) முயற்சி, செயல்திறன் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
பல ஆண்டுகளாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் உண்மையிலேயே நாட்டைப் பெருமைப்படுத்தக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் உதவுகிறதா என கவனிக்க வேண்டும் என்கிறார் செந்தோசா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் .
பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறந்த பங்களிப்பை வழங்கிய மலேசிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். மலேசியாவின் பெயரை சர்வதேச அரங்கில் பிரபலப்படுத்த சில விளையாட்டு வீரர்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. அதற்கு திறமைமிக்க பெரிய இளையோர் பட்டாளத்தை கொண்டிருக்க வேண்டும் என்று டாக்டர் குணராஜ் கூறினார்.
உதாரணத்திற்கு சிலாங்கூரில் மட்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளனர் அவர்களின் திறமைகளை வளர்க்க போதுமான வளம் பயன்படுத்தப்படுகிறதா?
ஆக, மக்களிடம் அதிக தொடர்பு கொண்டுள்ள என்னை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி போன்ற இடங்களில் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். திறமைசாலிகளுக்குக் கட்டமைக்கப்பட்ட பயிற்சி மற்றும் போதுமான விளையாட்டு வசதிகளைப் பல மாவட்டங்களிலும் ஏற்படுத்தி தர வேண்டும். அதன் வழி விளையாட்டாளர்களின் திறனை மேம்படுத்த இயலும் என்றார்
உதாரணத்திற்கு மலேசியா அதிக தடகள வீரர்களை கொண்டிருந்தால் மட்டுமே , அவர்களில் திறமையானவர்களை தேர்ந்தெடுக்க முடியும் , உண்மையாக திறன்மிக்கவர்களே ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுகளில் பதக்கம் வெல்ல முடியும் என்கிறார்.
நாம் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும் என இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சை வலியுறுத்தினார் டாக்டர் குணராஜ்.