NATIONAL

கிள்ளான், புக்கிட் திங்கியில் துப்பாக்கிச் சூடு-ஆடவர் காயம்

கிள்ளான், ஆக. 25 – பண்டார் புக்கிட் திங்கி, லெபோ பத்து நீலாமில்  உள்ள உணவகம் ஒன்றில் கடந்த  வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆடவர் ஒருவருக்கு இடது இடுப்பில் காயம் ஏற்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சப்பவத்தில்  அந்த 45  வயது உள்நாட்டு  நபர் காயங்களுக்குள்ளானதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி  காவல்துறைத் தலைவர் சா ஹூங் ஃபோங் கூறினார்.

வெள்ளை நிற பல்நோக்கு வாகனத்தில் உணவகத்திற்கு வந்த உள்ளூர் நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக  நம்பப்படுகிறது என்று  அவர் சொன்னார்.

உணவகத்திற்கு வெளியே அமர்ந்திருந்த நபர்களை நோக்கி அந்த நபர் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அதே வாகனத்தில் தப்பிச் சென்றார் என்று  சா ஹூங் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காகக் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  வேளையில் அவரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் ஆறு தோட்டா உறைகளும் ஒரு தோட்டாவும் மீட்கப்பட்டன. கொலை முயற்சி தொடர்பில்  குற்றவியல் சட்டத்தின் 307 வது பிரிவின் கீழ் விசாரணைக்காக சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாக அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையங்கள் அல்லது தென் கிள்ளான் காவல்துறை தலைமையகத்தை 03-3376 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :