NATIONAL

2,294 டிங்கி சம்பவங்கள் பதிவு – மூவர் உயிரிழப்பு

புத்ராஜெயா, ஆகஸ்ட் 26: ஆகஸ்ட் 11 முதல் 17 வரையிலான 33வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (2,278) ஒப்பிடும்போது 2,294ஆக சற்று அதிகரித்துள்ளது. மேலும், இக்காலக்கட்டத்தில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 75,928 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்
இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 92,827ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்
ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

இவ்வாண்டு 83 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 54 இறப்புகள்
மட்டுமே பதிவாகி இருந்தன, என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

​​மேலும், தொற்றுநோயியல் 33வது வாரத்தில் 91 ஹாட்ஸ்பாட் இடங்கள்
பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

அதாவது சிலாங்கூரில் 74 இடங்களும்,கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் கிளந்தானில் தலா 3 இடங்களும், கெடா மற்றும் பினாங்கில் தலா ஓர் இடமும் பதிவாகியுள்ளன.

– பெர்னாமா


Pengarang :