கோலாலம்பூர், ஏப். 7 – மண்ணைக் கொட்டும் போது 10 டன் லோரி சாய்ந்ததில் அதன் ஓட்டுநர் லோரியின் அடியில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் உலு சிலாங்கூர், செரண்டாவில் உள்ள அந்தாரா காப்பி கட்டுமான தளத்தில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிகழ்ந்தது.
கட்டுமானத் தொழிலாளியுமான 36 வயதான பாதிக்கப்பட்ட ஆடவர் லோரியிலிருந்த மண்ணை இறக்கி முடித்த போது லோரி திடீரென வலது பக்கம் சாய்ந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமது அஸ்ரி முகமட் யூனுஸ் கூறினார்.
அந்த ஓட்டுநர் லோரியில் இருந்து குதித்து தப்ப முயன்றார். ஆனால், சரியான நேரத்தில் அவ்வாறு செய்ய இயலவில்லை. லோரி அவர் மீது கவிழ்ந்து உடல் நசுங்கி உயிரிழந்தார் என்று அஸ்ரி முகமட் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அவரது உடல் பரிசோதனைக்காகக் கோல குபு பாரு மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த விபத்து பற்றிய தகவல் தெரிந்தவர்கள், 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் நடத்தப்படும் விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் வலியுறுத்தினார்.