ஷா ஆலம், மார்ச் 18- பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பைகளுக்கு வர்த்தக மையங்களில் விதிக்கப்படும் 20 காசு கட்டணம் மூலம் வசூலான 64 லட்சம் வெள்ளி விழிப்புணர்வு இயக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
இத்தகைய விழிப்புணர்வு இயக்கங்களை வெற்றியடையச் செய்வதில் பெரும் பங்காற்றும் தரப்பினரை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இத்தொகை பயன்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
இத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்திய ஓராண்டு காலத்தில் வசூலான தொகை இதுவாகும் என்று அவர் சொன்னார்.
இந்த தொகையின் அளவு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக மக்கள் அதிகம் வெளியில் செல்லவில்லை. ஆனாலும் பிளாஸ்டிக் பைகளின் பயனீடு அதிகமாகவே உள்ளது என்றார் அவர்.
இது ஆரோக்கியமற்ற சூழலின் அறிகுறி எனக்கூறிய அவர், பிளாஸ்டிக் பைகளின் பயனீட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியை சவால்மிக்கதாகவும் ஆக்கியுள்ளது என்று சொன்னார்.
இருந்த போதிலும் மாநில மக்களிடையே பிளாஸ்டிக் பைகளின் பயனீட்டுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளதை மெர்டேக்கா சென்டர் மேற்கொண்ட ஆய்வுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 85 விழுக்காட்டினர் அன்றாட வாழ்க்கையில் தாங்கள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை வெகுவாக குறைத்துள்ளதாக கூறியுள்ளதை அவர் உதாரணம் காட்டினார்.