ஷா ஆலம், மார்ச் 19– இரண்டாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு பதிந்து கொள்ளும்படி மூத்த குடிமக்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய பிரச்னை கொண்ட நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நோய்த் தொற்று பீடிக்கும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு கடுமையான பிரச்னைகளை கொண்ட இத்தரப்பினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது அவசியம் என்று சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா கூறியது.
ஆகவே, அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு அவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அந்த இலாகா வலியுறுத்தியது.
65 வயதுக்கும் மேற்பட்ட முதியோர், நோய்த் தாக்கம் கொண்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மையமாக கொண்ட இரண்டாவது தடுப்பூசித் திட்டம் அடுத்த மாதம் தொடங்கி வரும் ஆகஸ்டு வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
இணையம் வாயிலாகவும் வழக்கமான முறையிலும் தடுப்பூசிக்கு பதிந்து கொள்ள ஐந்து வழிமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
இணையம் வாயிலாக பதிந்து கொள்வதற்கு இரு வழிகள் உள்ளதாக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழிகாட்டி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைசெஜாத்ரா செயலி வழி பதிவு செய்வது மற்றும் http;//www.vaksincovid.gov.my. என்ற அகப்பக்கம் வாயிலாக பதிந்து கொள்வது ஆகியவையே அவ்விரு வழிமுறைகளாகவும்.
வழக்கமான நடைமுறையைப் பொறுத்த வரையில் இந்நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி சேவையைப் பயன்படுத்துவது, பொது அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகுவது, புற நகர் மக்களுக்கான உதவித் திட்டத்தில் பங்கேற்பது ஆகிய மூன்று வழிகளை பயன்டுத்தி தடுப்பூசித் திட்டத்திற்கு பதிந்து கொள்ளலாம்.