கோலாலம்பூர், மே 3– இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்ட உருமாறிய கோவிட்-19 நோய்த் தொற்றை சுகாதார அமைச்சு மலேசியாவில் முதன் முறையாக கண்டு பிடித்துள்ளது.
பி.1.617 எனும் வகை என்ற அந்த உருமாறிய தொற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்திய பிரஜை ஒருவரிடம் கண்டு பிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
உருமாறும் தன்மை கொண்ட இந்த தொற்று எளிதில் பரவக்கூடியது, கடுமையான பாதிப்புகளை தரக்கூடியது என்பதோடு நோய்த் தடுப்பு மருந்தையும் வீரியமிழக்கச் செய்யக்கூடியது என்று அவர் சொன்னார்.
இந்நோய்த் தொற்றின் தொடர்புச் சங்கிலியை உடைப்பதற்கு மருத்துவ ரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இவ்விவகாரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து புதிய உருமாறிய நோய்த் தொற்று நாட்டிலும் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு பயணிகள் நாட்டிற்கு வர அரசாங்கம் கடந்த வாரம் தடை விதித்தது.
இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்றின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடும் நிலையில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.