கோலாலம்பூர், ஜூன் 19-தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செம்பனைத் தோட்டத் துறையை இலக்காக கொண்ட முன்னோடி தடுப்பூசித் திட்டத்தை தோட்டத் தொழில்துறை மற்றும் மூலத்தொழில் அமைச்சு விரைவில் தொடக்கவுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் தொடக்கப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் சுமார் 5,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் டத்தோ டாக்டர் முகமது கமாருடின் அமான் ரசாலி கூறினார்.
இத்திட்டத்திற்கு சி,ஐ.டி.எப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழுவின் முழு ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த தடுப்பூசித் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கு ஏதுவாக தடுப்பூசித் பணிக்குழுவுடன் தாங்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைளை வரைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் அரசாங்கம் தடுப்பூசிளை இலவசமாக வழங்கும். எனினும், மருத்துவ உபகரணங்கள், தன்னார்வலர்கள், பாதுகாவலர்களுக்கான அலவன்ஸ், மருத்துவர்கள் மற்றும் தாதியர் உள்பட தடுப்பூசி மையத்திற்கு தேவையான செலவுகளை தோட்ட உரிமையாளர்கள் ஏற்க வேண்டும் என்றார் அவர்.