ஷா ஆலம், நவ 30: சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ்கள் உட்பட தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதத்தைத் தாண்டி உள்ளதன் மூலம் இத்தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் மாநில அரசுக்கு உதவியுள்ளனர்.
சிலாங்கூர் தடுப்பூசி செல்வக்ஸ் (Selvax) எனும் திட்டத்தைச் செயல்படுத்தியதன் விளைவுதான் இந்தச் சாதனை எனச் சுகாதார எஸ்கோ கூறியது.
“மாநில அரசிடம் இன்னும் சினோவாக் தடுப்பூசி உள்ளது. பூஸ்டர் ஊசியை விரும்பும் எந்தவொரு நபரும் அதை அருகில் உள்ள கிளினிக்குகளில் இலவசமாகப் பெறலாம்" என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டசபையில் தொற்றுநோய் கட்டுப்பாட்டின் நிலை குறித்து உலு கிலாங் பிரதிநிதி சாரி சுங்கிப்பின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஜூன் 2021யில், சிலாங்கூர் அரசாங்கம் RM200 மில்லியன் செலவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட செல்வக்ஸ் (Selvax) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக குறைந்த வருமானம் பெறுபவர்கள், முதியவர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் எனும் தரப்பினருக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவிய 35 முதல் 46 வது வாரம் வரை தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை சராசரியாக 1,000 முதல் 2,000 நோயாளிகள் எனக் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சித்தி மரியா தெரிவித்தார்.
"பெரும்பாலான சம்பவங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை, இரண்டாம் வகையைச் சேர்ந்ததாக உள்ளது. தொடர்ந்து, 4.5 சதவீதம் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகைகளை உள்ளடக்கியுள்ளது. சராசரி இறப்பு விகிதம் ஒரு வாரத்திற்கு ஆறு சம்பவங்களாக இருகின்றன. ஆனால் நவம்பர் 19 அன்று முடிவடைந்த 46வது தொற்றுநோய் வாரத்தில் 11 சம்பவங்களாக அதிகரித்துள்ளது.
"தொடக்கத்திலிருந்து 46வது வாரம் வரை 10,911 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.