கோலாலம்பூர், டிச.14: நேற்று அம்பாங் பாயிண்ட்டில் உள்ள உணவகம் ஒன்றின் முன் பணத்தை மாற்ற திட்டமிட்ட நபரிடம் இருந்து 30,000 அமெரிக்க டாலரை (RM132,870) அபகரித்து தப்பிச் சென்றதாகக் கருதப்படும் இரண்டு வெளிநாட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி மொஹமட் ஃபரூக் எஷாக் கூறுகையில், சந்தேக நபர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவருக்கு அமெரிக்க டாலரை மலேசிய ரிங்கிட்டுக்கு மாற்றி தருவதாகக் கூறி சந்தித்துள்ளது கண்டறியப்பட்டது, மேலும் அவருக்கு 15,000 ரிங்கிட் லாபம் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் (30 வயது) தனது அமெரிக்க டாலரை கைப்பையிலிருந்து எடுத்த போது அந்நபர் திடீரென அப்பணத்தை அபகரித்து விட்டு டொயோட்டா வியோஸ் வாகனத்தில் ஏறி தப்பி விட்டார். அவ்வாகனத்தைப் பாதிக்கப்பட்டவருக்கு அறிமுகம் இல்லாத ஒரு மர்ம நபர் ஓட்டியுள்ளார்.
“மேலும் சந்தேக நபர் போலி மலேசிய ரிங்கிட்டை விட்டுச் சென்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 395யின் கீழ் விசாரிக்கப்படுகிறது. 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்பு அடி விதிக்கப்படலாம்.
“கள்ளநோட்யை வைத்திருந்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 489C பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது, மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.
– பெர்னாமா